வெள்ளி, 3 ஏப்ரல், 2015

கலைஞன் தோன்றினான்

நீல அரங்கில்
நிசப்த நெரிசல்

கறுப்புத் திரைகள் கட்டிய மேடையில்
கதாநாயகன் வரவெதிர்பார்த்து
நித்திரையை இமைக்
கத்திரி கொண்டு
துண்டித்துக்கொண்டே
மண்டியிருக்கும்,
கண்கட்டும் உள்ள
ரசிகரின் நெரிசல்

"எப்படி இருப்பன்?"
"எப்படி வருவான்"?
"என்னென்ன அதிசய
இன்பங்கள் படைப்பான்?"

விழிகளினாலே விவாதங்கள்
விடைகளினாலே கேள்விகள்

ஒற்றைப் பொன்விளக்கொளியில்
நீல அரங்கில் நிசப்த நெரிசல்
ஒருமுறை கூடப் பார்த்தறியாத
உள்ளங்கள் தோறும் உணர்ச்சித் துடிப்புகள்

இன்னுமவன் வரவில்லை
ஏக்கங்கள் ஏக்கங்கள்

அவர்களைச் சுற்றி
ஓடும் வினாடிகள்
மொய்த்தன பறந்தன
மொய்த்தன பறந்தன

ரசிகரின்
கண்ணொளிக் குளங்கள்
கலங்கக் கலங்க
உறக்கத்தின் உதடுகள்
மௌன மந்திரத்தை
முணுமுணுத்தன

ஒற்றைப் பொன்விளக்கொளியில்
கதானாயகன்
நீல அரங்கில்
காலடி வைக்குமுன்
கண்மட்டுமுள்ள ரசிகக் கூட்டம்
மந்திரப் போர்வையுல்
மறைந்தே போனது

போனதும்,
ஒற்றைப் பொன்விளக்கு ஒளி இழந்தது
இழந்ததும்,
நீல அரங்கில்
கறுப்புத் திரைகளை விலக்கிக் கொண்டு

ஆயிரம் சோதி
அழகுகளோடு
கதாநாயகன் தோன்றினான்

பாவம்
ரசிகர் உறங்கவும்
கலைஞன் தோன்றினான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...